சிவகாசி,
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் திண்ணை பிரசாரம் செய்தனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களில் தி.மு.க.வை பற்றி தே.மு.தி.க. பேசியதை மறந்து. தற்போது அந்த கட்சி, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்ததை அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்கவில்லை. மீண்டும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும் என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அதற்கான வாய்ப்பு இல்லை.
இது ஒரு பகல் கனவு. தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடால் தமிழகம் மிகப்பெரிய கடனாளியாக இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சராக பதவி ஏற்று அந்த நலத்திட்டங்களை வழங்குவார். தி.மு.க. அமைச்சர்கள் செய்யும் தவறை கட்சியின் தலைமை தட்டிக்கேட்காமல், தட்டிக்கொடுக்கும் நிலை உள்ளது.
த.வெ.க. நிலைமை பரிதாபமாக உள்ளது. அந்த கட்சியை பற்றி யாரும் கண்டுகொள்வது இல்லை. தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இடையேதான் போட்டி. த.வெ.க. இந்த தேர்தலோடு முடிந்துவிடும். த.வெ.க.வுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் பேசி வருகிறார். ஒருநாள் கூத்து முடிந்தவுடன் அந்த கட்சி இடத்தை காலிசெய்து விட்டு ஓடிவிடும். த.வெ.க.வுக்கு களத்தில் இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
