நெல்லை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, திருநெல்வேலி மாநகர பகுதிகளில், மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை முன்பு ஆரம்பித்து சமாதானபுரம் வரையும், பெருமாள்புரம் தபால் நிலையத்தில் ஆரம்பித்து தியாகராஜ்நகர் எஸ்.வி.எஸ். திருமண மண்டபம் வரையும், சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பட்டியில் ஆரம்பித்து சந்திப்பு ரெயில் நிலையம் வரையும், டவுண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு ரத வீதிகள் மற்றும் மாநகரின் முக்கிய இடங்களில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த கொடி அணி வகுப்பில் சரக போலீஸ் உதவி கமிஷனர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர், ஆயுதப்படை காவல் துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
