தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உள்ளாடையில் 14 லட்சம் ரூபாயை மறைத்து எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 26-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்து சோதித்த போலீசாருக்கு காத்திருந்தது அதிர்ச்சி..
அப்போது அவரது உள்ளாடைக்குள் கூடுதலாக பைகள் அமைத்து, அவற்றிற்குள் பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர். விசாரணையில், பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதனால், கருப்பு பணம் கடத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் பையில் பதுக்கி வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் யாருக்காக பணம் கடத்தினார். யார் யாருக்கு இதில் தொடர்ப்பிருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

