சபரிமலை ஐயப்பன் கோவில் பூசாரி முதல் பணியாளர்கள் வரை லஞ்சம்: வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்தது அம்பலம் 

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில், தனலட்சுமி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகள் உள்ளன. அய்யப்பன் கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த வங்கிகளில் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.ஐயப்பன் கோவில் தங்கம் கொள்ளை, இருமுடி நெய் முறைகேட்டை தொடர்ந்து பணியாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

பூசாரி முதல் தினக்கூலி பணியாளர்கள் வரை ஐயப்பன் கோவிலில் லஞ்சமாகவும், முறைக்கோடாக சம்பாதித்த பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருந்தால் சிக்கல் என பயந்து. தங்களது வங்கி கணக்குகளில் அடிக்கடி செலுத்தி வந்துள்ளனர், அவ்வப்போது பணத்தை வங்கி வழியாக பலரது கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த சீசனில் மட்டும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழியாக, 1,667 பரிவர்த்தனைகள் மூலம், 8.08 கோடி ரூபாய் மற்ற வங்கி கணக்குகளுக்கு அனுப்பி உள்ளனர். தனலட்சுமி வங்கியில், 942 பரிமாற்றங்கள் மூலம், 11.45 கோடி ரூபாய் அனுப்பி உள்ளனர். மேல் சாந்தி மற்றும் பூசாரிகள், தினக்கூலி பணியாளர்கள், குத்தகைதாரர்கள் ஆகியோரின் 18 கணக்குகளில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் சிலர் நெய் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையம் மூலம் 14.08 லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளனர். தினக்கூலியாக ஐயப்பன் கோவிலில் வேலை செய்பவர்கள், லாட்டரி விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தினக்கூலி பணியாளர்கள் நியமனம் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிமன்றம் நியமித்துள்ள தனி அதிகாரி இந்த அறிக்கையை தாக்கல் செய்து இருந்தது. இந்த அறிக்கையில் இந்த உண்மைகள் அம்பலமாகி உள்ளன. 

Source link