சாதி பெயரை சொல்லி வாக்கு சேகரிப்பு
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக, இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமென கடுமையாக போராடி வருகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தீவிரமான பரப்புரைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். இதனிடையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான திண்டுக்கல் சீனிவாசன், சாதிய பெயரை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன்
அதாவது, திண்டுக்கல் மாவட்டம் காப்பிலியப்பட்டியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “நீங்கள் எல்லாம் ஓக்கலிகர் கவுண்டர். ஆனால் அடுத்த முதலமைச்சராக வரவுல்லவர் கொங்கு வேளாள கவுண்டர். தமிழ்நாட்டை ஒரு கவுண்டர் ஆளப்போகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி. அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.
சர்ச்சைகளை கிளப்பும் வீடியோ
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு பழனிசாமி கவுண்டர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஆட்சியை நடத்தி காட்டினார். மீண்டும் அவர் நல்லாட்சி செய்வதற்கு இரட்டை இலை சின்னத்தில் எனக்கு ஓட்டளித்து வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் சாதி பெயரை சொல்லி திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு கேட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுகவினர் அதிருப்தி
இதனையடுத்து அவருக்கு எதிராக தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு அந்த குறிப்பிட்ட சமுதாய மக்களின் ஓட்டு மட்டும் போதுமா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். மற்றொரு பக்கம் மூத்த நிர்வாகிகள் இது போன்று பேசி அதிமுகவுக்கு வரும் வாக்குகளை கெடுப்பதாக அந்த கட்சியை சார்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன்.
திமுக வேட்பாளர்
சிட்டிங் எம்எல்ஏவான அவர் தற்போது மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் திமுக சார்பாக ஐபி பெரியசாமியின் மகனான ஐபி செந்தில்குமார் வேட்பாளராக நிற்கிறார். இவர் கடந்த முறை பழனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது தொகுதி மாறி திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளாராக களமிறங்கியுள்ளார் செந்தில்குமார். அவர் தற்போது தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.
வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முயற்சி
இது திண்டுக்கல் சீனிவாசனுக்கு சவாலாக மாறியுள்ளது. இதனையடுத்து எப்படியாவது கடந்த முறை வெற்றியை தக்க வைத்து கொள்ள வேண்டுமென இறங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது இபிஎஸ் சாதி பெயரை சொல்லி திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
