சாலை விபத்தில் உயிரிழந்த நடிகரின் மகன்.. தீபாவளியில் நடந்த துயரம்

வேளச்சேரி -தரமணி சாலை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பலி. இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை ஆர்.ஏ புரம் ஸ்ரீ காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக்.இவரது மகன் நித்தீஷ் ஆதித்யா (21) இன்று அதிகாலை 2 மணியளவில் தனது நண்பர்கள் ஜெயகிருஷ்ணண் மற்றும் வெங்கட் ஆகியோருடன் தீபாவளி கொண்டாட்டம் முடித்து விட்டு காரில் வேளச்சேரி – தரமணி சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது வேளச்சேரி -தரமணி 100 அடி சாலை, விஜயநகர் பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.‌ இதில் காரை ஓட்டி சென்ற இளைஞர் நித்தீஷ் ஆதித்யா சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த ஜெய் கிருஷ்ணன், வெங்கட் இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதனை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலை விபத்தில் உயிரிழந்த நித்தீஷ் ஆதித்யா உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌

மேலும் காயமடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.‌ பின்னர் இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌குறிப்பாக சாலை விபத்தில் உயிரிழந்த நித்தீஷ் ஆதித்யா தந்தை கார்த்திக் சின்னத்திரை நடிகர் என கூறப்படுகிறது.

Source link