புதிய கட்சி துவங்கிய சசிகலா
சசிகலா, ஓபிஎஸ் இருவரையும் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்வதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், சசிகலா அஇபுதமமுக கட்சியை துவங்கினார். அவருக்கு தென்னந்தோப்பு சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து சசிகலா வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை துவங்கியுள்ள நிலையில், இது அதிமுகவுக்கு சிக்கலாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.
வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை
இந்நிலையில் விருதுநகர் திருச்சுழி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சசிகலா பெங்களூர் சிறைச்சாலையில் இருந்த சமயத்தில் திட்டுமிட்டு தனக்கு கொரோனாவை பரப்பியதாக பேசியுள்ளார். இது சம்பந்தமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளதாவது, “நான் சிறைக்கு சென்ற சமயத்தில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென ஒருவரை முதலமைச்சர் ஆக்கிட்டு போனேன். அதுதான் நான் பண்ணது. ஆனால் மூன்று மாதத்துக்குள் என்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடுக்குறாங்க. இன்னைக்கு வரைக்கு அது என்ன விஷயம்ன்னு எனக்கு தெரியலை.
திட்டமிட்டு எனக்கு எதிராக இதை செய்தார்கள்
சிறைச்சாலைல இருந்த காரணத்தால எதுக்காக இதை செய்தார் என்றே தெரியவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நான் வெளியே வர்றேன். எனக்கு கொரோனா வந்து விட்டது. சிறைச்சாலையில் பெண்கள் பகுதியில் யாருக்கும் கொரோனா இல்லை. திடீரென ஒரு பெண்ணை என் வார்டுக்குள் வந்தாங்க. அவுங்க சிறைச்சாலையில் நான் பார்த்ததே இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் அவுங்க. எப்படி அவுங்க உள்ள வந்தாங்க என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
பெங்களூர் சிறைச்சாலையில் நடந்த சம்பவம்
மறுநாளில் இருந்து எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிருச்சு. சிறைச்சாலைல 200 பேருக்கு மேல் இருக்கோம். எனக்கு மட்டும் கொரோனா பாதிப்பு. 85% எனக்கு கொரோனா வந்தது. அதிலிருந்து நான் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் இருந்த சமயத்தில் திட்டமிட்டு தனக்கு கொரோனா பரப்பப்பட்டதாக சசிகலா பேசியுள்ளது பரப்பினை கிளப்பியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு சவால்
அதிமுக முன்னாள் அமைச்சர் சிலருக்கு எதிராக வேட்பாளர்களை நிப்பாட்டி தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார் சசிகலா. இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏற்கனவே திமுக, தன்னை முதலமைச்சர் ஆக்கியவருக்கே துரோகம் செய்தவர் இபிஎஸ் என பிரச்சாரம் செய்து வருகிறது. இதனிடையில் சசிகலாவும் கட்சி துவங்கி அவருக்கு எதிராக பரப்புரை செய்து வருவது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
டிடிவி தினகரன் கருத்து
இதனிடையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் சசிகலாவின் அரசியல் வருகையால் அதிமுக வாக்கு சதவிகிதம் பாதிக்காது என பேசினார். திமுகவுக்கு மாற்று என்பது அதிமுக தான். எனவே புதிய கட்சியின் வருகை காரணமாக எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென டிடிவி தினகரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
