புதுடெல்லி:
மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவற்றிற்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டுமே சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி பரவியதால் பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பிக்களும் இதில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ராகுல் காந்தி கூறியதாவது:“அச்சப்பட வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால் முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக மோடியே அச்சப்படுகிறார். அதானி வழக்கு, எப்ஸ்டீன் விவகாரம் காரணமாக மோடி அஞ்சுகிறார். அவைக்கு வர அவரால் முடியவில்லை. அச்சத்தில் இருக்கும் மோடி, நாட்டு மக்களை அஞ்ச வேண்டாம் என்று கூறுகிறார்.” இவ்வாறு அவர் கூறினார்.
