சிவகாசிக்கு U-TURN போட்ட ராஜேந்திர பாலாஜி.. ராஜபாளையத்துக்கு NO சொல்லியாச்சு! – admk rajendra bhalaji leaves rajapalayam constituency and targets sivakasi constituency again

ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற முடியாததால், தற்போது மீண்டும் தனது பழைய வலுவான ஆதரவைக் கொண்ட சிவகாசி தொகுதிக்கே முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திரும்பியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி
சிவகாசி தொகுதியை அரசியல் அடையாளமாகக் கொண்டு தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று அமைச்சராக உயர்ந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அதனைத் தொடர்ந்து குறுகிய காலத்திலேயே அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு கட்சிக்குள் முக்கிய இடத்தை பிடித்தார்.

2 முறை சிவகாசியில் வெற்றி

அந்த வெற்றியின் பின்னணியில், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதே சிவகாசி தொகுதியில் மீண்டும் களம் இறங்கி வெற்றி பெற்று அமைச்சரானார். இவ்வாறு தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தாலும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். சிவகாசியில் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிக்கான சாத்தியம் குறையலாம் என்ற கணிப்பில், அதிமுகவிற்கு சாதகமாக கருதப்பட்ட ராஜபாளையம் தொகுதிக்கு மாறினார். அந்தத் தொகுதியில் பெரிய அளவில் பிரச்சாரம் செய்து, வாக்காளர்களை அணுகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

வருந்திய ராஜேந்திர பாலாஜி

இருப்பினும், தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் முன்னிலை பெற்று, ராஜேந்திர பாலாஜி 3,898 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அப்போது, சிவகாசியில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்ற வருத்தத்தை அவர் வெளிப்படுத்தியதாக கட்சியினர் கூறுகின்றனர்.
தோல்விக்குப் பிறகும் அவர் அரசியல் செயல்பாடுகளை குறைக்காமல் தொடர்ந்து தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆரம்பத்தில் மீண்டும் ராஜபாளையம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என கூறியிருந்தாலும், கடந்த சில மாதங்களாக அவரது கவனம் மீண்டும் சிவகாசி பக்கம் திரும்பியது.

சிவகாசியில் மீண்டும் போட்டி

அங்கு பொதுமக்களுடன் தொடர்பு வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொங்கல் பரிசுகள் வழங்குதல், இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். இதன் மூலம் அவர் மீண்டும் சிவகாசி தொகுதிக்கே திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே உருவாகியது.
அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் சிவகாசி தொகுதிக்கான வேட்பாளராக கே.டி. ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

சிவகாசியில் அதிமுகவின் முகம்

கட்சியின் நிர்வாகிகள் கூறுவதாவது, கடந்த 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த காலத்தில் ராஜேந்திர பாலாஜி கட்சி அமைப்பை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். கிளை நிலை முதல் மாவட்ட அளவு வரை தனது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வழங்கி, விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அதிரடி பேச்சுகளால் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றார். அதே நேரத்தில், 2019 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பகுதியில் அதிமுக கூட்டணியை விட காங்கிரஸ் கட்சி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் முன்னிலை பெற்றது.

தவெகவிற்கு அதிமுக வாக்குகள் விழுமா… சுற்றுப் பயணத்தில் விஜய் என்ன பேசுவார்?

மேலும், அவரது செயல்பாடுகள் குறித்து முன்னாள் எம்பி டி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலைகளின் பின்னணியிலேயே அவர் ராஜபாளையம் தொகுதிக்கு மாறியதாக கூறப்பட்டது. ஆனால் அங்கும் வெற்றி பெற முடியாததால், தற்போது மீண்டும் தனது பழைய வலுவான ஆதரவைக் கொண்ட சிவகாசி தொகுதிக்கே திரும்பியுள்ளார்.