சென்னையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் பறிமுதல்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு செயல்முறை (Standard Operating Procedure) மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,000/-த்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000/- மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீட்டு குழுவிடம் (Appellate authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.

மேற்படி நிகழ்வுகளை சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் (FST) என்ற வீதம், 48 பறக்கும் படைகளும் (FST), 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST) என்ற வீதம், 48 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் (SST) ஏற்படுத்தப்பட்டு, இக்குழுவினர் மூன்று சுழற்சி முறைகளில் பணிகளை மேற்கொள்வார்கள். இக்குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில், 26.03.2026 அன்று வாகன சோதனையின்போது பறக்கும் படை குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ரூ.55,400/- மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.51,000/-, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,89,900/-, என மொத்தம் ரூ. 2,96,300/- ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link