சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சேர்ந்தவர் அருண்குமார் என்ற கூலி தொழிலாளி. இவருக்கு சுஜித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு சளி பிரச்சனை இருந்ததால் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் பெற்றோர். சளி பிரச்சனைக்கு ஓமந்தூரார் மருத்துவமனை செவிலியர் குழந்தைக்கு ஊசி போட்டு உள்ளார், இதில் சிறிது நேரத்தில் குழந்தை அழுது துடிக்க துவங்கியது, பெற்றோர் என்ன என அறிந்துகொள்ளும் முன்னரே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனால் அதிர்ந்த பெற்றோர் மருத்துவர்களிடம் முறையிட்டு உள்ளனர்.
எட்டு வயது சிறுமிக்கு போட வேண்டிய ஊசியை நான்கு மாத குழந்தைக்கு போடப்பட்டதால் மருந்தின் வீரியம் அதிகமாகி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து உள்ளது தெரியவந்தது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், இதனால் மருத்துவமனையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் நான்குமாத மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாத குழந்தை உயிரிழந்ததற்கு காரணமான ஓமந்தூரார் மருத்துவமனை டீன் மற்றும் செவிலியரை கைது செய்ய வலியுறுத்தி குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
