சென்னையில் விமானக் கட்டணங்கள் உயர்ந்தது – பயணிகள் அதிர்ச்சி

சென்னை,

போர் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் நேற்று கிலோ லிட்டருக்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 341 ஆக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி மாத இறுதியில் இருந்த விலையைவிட 114.5 சதவீதம் அதிகமாகும்.

இந்திய விமான போக்குவரத்துத்துறை தற்போது உலக அளவில் மூன்றாவது பெரிய சந்தையாக வளர்ந்து வருகிறது. 2026-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த விமானங்களின் எண்ணிக்கை 900-ஐ நெருங்குகிறது. அதில் சுமார் 850 விமானங்கள் இயக்கத்தில் உள்ளன.

இதில் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஆகாசா போன்ற நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் ஒரு நாளைக்கு தோராயமாக 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கிலோ லிட்டர் விமான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் 40 சதவீதம் எரிபொருளுக்கே செலவிடப்படுவதால், வரும் கோடை விடு முறை காலத்தில் விமான டிக்கெட் விலை 30 முதல் 50 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது. இந்த விலையேற்றம் விமான நிறுவனங்களுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். ஐ.சி.ஆர்.ஏ. அறிக்கையின்படி, 2026 நிதியாண்டில் இந்திய விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.18 ஆயிரம் கோடியாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு விமான கட்டணங்கள் பெருமளவு அதிகரித்து உள்ளன. அதன்படி ஜனவரி மாதத்தில் இருந்த குறைந்தபட்ச விமான கட்டணத்தைவிட நேற்று முதல் விமான கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான கட்ட ணங்கள் ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளன. இந்த கட்டண உயர்வுகள் தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் மிகவும் அதிகமாகவும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு ஓரளவு குறைவாகவும் உள்ளன.

Source link