சேலம்: செய்தியாளர்களுடன் த.வெ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சேலம்,

சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில், பிரசார வேனில் நின்றபடி கட்சியின் தலைவர் விஜய் கட்சி தொண்டர்களிடையே பேசினார்.

இந்த சூழலில் விஜய் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளியான சூரஜ் (37) என்பவர், வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சூரஜ், செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக விஜய் பரப்புரை கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடும் வெயிலால் மயங்கியவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிர்வாகிகள் கூட்டம் சாரை சாரையாக வெளியேறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சேலத்தில் இறந்தவர் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் த.வெ.க. மாவட்டச் செயலாளர் சென்றுவிட்டநிலையில், மருத்துவமனையில் செய்தியாளர்களுடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்களின் வாகனத்தின் மீது ஏறி த.வெ.க.வினர் தாக்க முயன்றதாக கூறப்படும்நிலையில், த.வெ.க.வினரின் வாகனத்தை செய்தியாளர்கள் முற்றுகையிட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

இதனிடையே பரப்புரை கூட்டத்தில் உயிரிழந்த சூரஜின் குடும்பத்தினர், மருத்துவமனையில் கதறி அழுத சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Source link