சேலை கொடுத்தா போதுமா.. உள்ளாடை கொடுக்க வேண்டாமா? திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு- வலுக்கும் கண்டனம்! – aiadmk leader dindigul srinivasan sparks controversy with remarks on women’s clothing scheme

ஓரே நாளில் பெண்கள் குறித்து அதிமுகவின் முக்கிய இரு பிரமுகர்கள் பேசிய கருத்துகள் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Dindigul Srinivasan Controversial Speech(புகைப்படங்கள்Samayam Tamil)
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்து நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டம், அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய மேடையாக இருந்தாலும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய கருத்துகள் காரணமாக புதிய சர்ச்சைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டமே, பெண்களை பற்றிய பேச்சால் விமர்சனத்திற்கு உள்ளானதாக அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியின் கீழ் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் பரவல் ஆகியவற்றை கண்டித்து, மார்ச் 17ஆம் தேதி என்டிஏ கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பல மாவட்டங்களிலும் முக்கிய தலைவர்கள் பங்கேற்று அரசை கடுமையாக விமர்சித்தனர்.

தனித்து போட்டியிடும் TVK, NTK & கூட்டணியுடன் களம் இறங்கும் DMK, ADMK! யாருக்கு வெற்றி🏆

சி.வி. சண்முகம் பேச்சு – தொடங்கிய சர்ச்சை

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.வி. சண்முகம் பேசிய கருத்து ஏற்கனவே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. “நயன்தாரா வேண்டும் என்றால் முதல்வர் அதை நிறைவேற்றுவாரா?” என்ற அவரது கேள்வி, நடிகையை நேரடியாக குறிப்பிடுவதால் கடும் எதிர்ப்பை கிளப்பியது. பின்னர், அது தவறுதலாக கூறப்பட்டதாகவும், எந்த உள் நோக்கமும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். ஆனால் அந்த விளக்கம் சர்ச்சையை முழுமையாக அடக்கவில்லை.

திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு – தீவிரமான சர்ச்சை

இந்த விவகாரம் ஓய்வதற்குள், திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “சேலை கொடுத்தார்கள்… ஆனால் பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என்று பெண்கள் கேட்கிறார்கள்” எனக் கூறி உள்ளார். பெண்களை குறிப்பிட்டு இவ்வாறு பேசப்பட்ட இந்த கருத்து உடனடியாக சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. பெண்களின் மரியாதையை பாதிக்கும் வகையில் இந்த பேச்சு அமைந்துள்ளதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினை

இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமே, பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளால் களங்கப்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. “பெண்களின் பாதுகாப்பை பேசும் மேடையில், பெண்களின் மரியாதை காக்கப்பட வேண்டாமா?” என்ற கேள்வி பரவலாக பகிரப்படுகிறது. மேலும், அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் பேசும் வார்த்தைகள் சமூகத்திற்கு தவறான செய்தியை வழங்குகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அரசியல் நாகரிகம் மீதான கேள்விகள்

தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பெண்களை குறிவைத்து சர்ச்சையான கருத்துகள் வெளிவருவது, அரசியல் நாகரிகம் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பேசுபவர்களின் வார்த்தைகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், பொறுப்பற்ற பேச்சுகள் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கின்றன.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை வலியுறுத்த வேண்டிய அரசியல் மேடைகள், பெண்களை இழிவுபடுத்தும் இடமாக மாறுவது கவலைக்குரியது. பெண்களுக்கு மரியாதை அளிக்கும் பேச்சு மற்றும் நடைமுறை இடையே உள்ள முரண்பாடு குறைய வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.