பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும், பாமக தலைவர் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்த கடிதம் தொடர்பாக உத்தரவை ரத்து செய்து தன்னை பாமக தலைவராக அறிவிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பாமக கட்சி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் பாமக கட்சியின் பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த மனு மீது மட்டுமே வாதங்களை வைக்க அனுமதிக்க முடியும் எனக்கூறி, நிராகரிக்க கோரி மனு மீது மட்டும் இரு தரப்பு வாதங்களை வைப்பதற்காக வழக்கின் விசாரணையை மார்ச் 13 .ம் தேதிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.
நாளை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், பாமக கட்சியின் பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். கட்சியின் பொதுசெயலாளரான தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்து விட்டது என்பதால் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 10 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் உயர்நீதிமன்றம் தடைவிதித்து இருப்பது ராமதாசு தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

