பிலிபித்
உத்தர பிரதேசத்தின் பிலிபித் நகரில் வசித்து வருபவர் குல்தீப் சுக்லா. இவருடைய மனைவி வினீதா சுக்லா. சில நாட்களுக்கு முன் திடீரென மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை பிலிபித் நகரில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதன்பின்னர், பரேலி நகருக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டது என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால், அவரை ஊருக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறி விட்டனர்.
இதனால், கணவர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் காரில் புறப்பட்டு உள்ளனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் கார் பள்ளம் ஒன்றில் இறங்கி ஏறியுள்ளது. இதில், வினீதாவுக்கு சுவாசம் வந்துள்ளது. அவர் அசைந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து உஷாரான அவர்கள் திரும்பவும் டாக்டர் ராகேஷ் சிங் என்பவரிடம் கொண்டு சென்றனர். விவரம் அறிந்ததும் அவர் பாம்பு கடிக்கான விஷ முறிவை கொடுத்துள்ளார். இதுபற்றி டாக்டர் ராகேஷ் சிங் கூறும்போது, நாங்கள் ஐ.சி.யு. குழுவை தயாராக இருக்க கூறி சிகிச்சை அளித்தோம்.
சில சமயங்களில் பாம்பு கடியின்போது, நியூரோடாக்சின்கள் வெளிப்படும். அந்த சூழலில், சிலர் உடனே சுயநினைவற்று போய் விடுவார்கள். கை, கால்களில் இயக்கம் இருக்காது என கூறினார்.
நாங்கள் பாம்பு கடிக்கான முறிவு மருந்து கொடுத்து சிகிச்சையை தொடங்கினோம். 24 மணிநேரத்திற்கு பின்னர் அவரிடம் அசைவு காணப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்னர் அந்த பெண் மெல்ல சுயநினைவுக்கு வந்துள்ளார். இதன்பின்பு செயற்கை சுவாச குழாய் அகற்றப்பட்டது. அவர் தற்போது நடந்து செல்ல கூடிய அளவில் உள்ளார் என கூறினார்.
வினீதாவின் கணவர் குல்தீப் கூறும்போது, சம்பவத்தன்று ரத்த அழுத்த பாதிப்பினால், மருந்து எடுத்து கொண்டார். அதனை கூறினார். 15 நிமிடங்களில் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார் என்றார். பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லை.
இதனால், வீட்டுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். அப்படி, காரில் வந்தபோது, ஹபீஸ்கஞ்ச் பகுதியில் பள்ளத்தில் இறங்கியபோது, வினீதா சுவாசிக்க தொடங்கி விட்டாள். அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றோம். அதன் பின் அவர் நன்றாக இருக்கிறார் என கூறினார். வினீதாவும், தனக்கு அன்று ரத்த அழுத்தம் அதிகம் இருந்தது.
நான் மருந்து சாப்பிட்டேன். அதன்பின்பு நடந்தது தெரியவில்லை என்றார். இந்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகம் சார்பில் வெளியான அறிக்கையில், பரேலி-சிதார்கஞ்ச் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் பள்ளம் எதுவும் இல்லை. போக்குவரத்து நிறைந்த பகுதி அது. அதனை நாங்கள் முறையாக பராமரித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
