அமராவதி,
ஆந்திர மாநிலம் மங்களகிரி பகுதியை சேர்ந்தவர் ஷேக் அகமது. 27 வயதான இவருக்கு திருமணமாகி, கிராந்தி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிறது.
இந்த நிலையில், வீட்டில் டிவியை அதிக சத்தத்துடன் வைத்து கிராந்தி பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது டிவி சத்தத்தை குறைக்குமாறு ஷேக் அகமது கூறி இருக்கிறார். இது தொடர்பாக கணவன் – மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த கிராந்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, கணவன் என்றும் பாராமல் ஷேக் அகமதுவை குத்தினார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஷேக் அகமதுவை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷேக் அகமது உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஷேக் அகமதுவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிராந்தியை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிவி சத்தத்தை குறைக்க சொன்னதற்காக கணவனை மனைவி கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
