பல்லேகலே,
டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நிலைமை சிக்கலாக மாறியுள்ளது. காயம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்ததால் சூப்பர்-8 சுற்றுக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 182 ரன்கள் என்ற இலக்கை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது. பதும் நிசாங்கா 52 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்தினார்.
இப்போட்டிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், “இந்த தோல்வி எங்களை மிகவும் காயப்படுத்தியது. அதேசமயம் இலங்கை சிறப்பாக விளையாடியது. நாங்கள் 20-30 ரன்கள் குறைவாக எடுத்தோம். இறுதி ஓவர்களில் இலங்கை பந்துவீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர்” என்றார். சூப்பர்-8 வாய்ப்புகள் குறித்து பேசுகையில், “இப்போது எங்கள் நிலை சிறப்பாக இல்லை. எங்களால் முடிந்ததை செய்துவிட்டோம். இனி எல்லாம் கடவுள் கையில்தான் உள்ளது” என்றார்.
தொடர்ச்சியான தோல்விகளால் ஆஸ்திரேலியாவின் சூப்பர்-8 வாய்ப்பு சிக்கலில் உள்ளது. ஓமனை எதிர்த்து கடைசி போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ஜிம்பாப்வே தனது கடைசி இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும். இன்று (பிப்ரவரி 17) ஜிம்பாப்வே – அயர்லாந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அயர்லாந்து வெற்றி பெற வேண்டும் என ஆஸ்திரேலியா எதிர்பார்க்கும்.
