புதுடெல்லி
டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்பயிற்சிக்கான ஒத்திகை இன்று காலையில் நடந்தது. இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) சேர்ந்த வீரர்கள், பல்வேறு படை பிரிவினரும் கலந்து கொண்டனர். அவர்கள் விமான நிலையத்தில் பயங்கரவாத ஒழிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான கூட்டுப்பயிற்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி சி.ஐ.எஸ்.எப். அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், நிலையத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும், அதற்கு முன்பே தயாராக இருப்பதற்காகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை, டெல்லி போலீசார், தேசிய பாதுகாப்பு படை, டெல்லி தீயணைப்பு படையினர், டி.ஜி.சி.ஏ., பி.சி.ஏ.எஸ்., மோப்ப நாய் பிரிவினர், பி.டி.டி.எஸ். மற்றும் மருத்துவ பணியாளர்களும் கூட்டாக இணைந்து இந்த கூட்டுப்பயிற்சிக்கான ஒத்திகையில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பிரிவினர் தங்களுக்குள் ஒருகிணைந்து தடையற்ற மற்றும் மேம்பட்ட முறையில் கூட்டாகவும், வலிமையுடனும் செயல்படவும் மற்றும் நடவடிக்கைகக்கு தயாராக இருப்பதற்கும் இந்த ஒத்திகை நடந்தது. சி.ஐ.எஸ்.எப். எப்போதும் விமான சேவை நடவடிக்கைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடர்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருக்கும். தொடர் கண்காணிப்பு, உஷார் நிலை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையுடன் செயல்படுவோம் என்றும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
