தபால் வாக்கில் குளறுபடி? கொந்தளித்த அதிமுக வேட்பாளர்..

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. தபால் வாக்குகள் அளிக்க பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரடியாக செல்லும் அலுவலா்கள், அவா்களிடம் தபால் வாக்குகள் செலுத்தும் முறையை எடுத்துக் கூறி, வாக்குகளைப் பதிவு செய்து பத்திரமாக எடுத்துச் செல்கின்றனா்.

அவர்களுக்கு பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய காலவரும் உடன் சென்றனர். இதனிடையே அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் குளறுபடிகள் நடப்பதாக கூறி அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இன்று 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் தபால்வாக்கு பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிமுக முகவர்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அருப்புகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேதுபதி வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் செந்தில் வேலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் மாரி முத்துவிடம் சென்று கேளுங்கள் என வட்டாசியர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வேட்பாளர் சேதுபதியும், அவரது ஆதரவாளர்களும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் செந்தில் வேலனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source link