திண்டுக்கல்,
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தல் மற்றும் 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழக்கும். நாடு முழுவதும் பாஜகவினர் குறுக்கு வழியில், கொல்லைப்புறமாக வந்து ஆட்சியை பிடிக்கிறார்கள். அதை தான் தமிழகத்திலும் முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்வழியில் போராடுகிறார். நிதி பங்கீட்டை தர மறுக்கும் பாஜக அரசையும், அதன் கொள்கையையும் எதிர்ப்பேன், உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டதற்கு நியாயமாக, முதல்-அமைச்சர் கனவில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பீகாரில் 10 முறை ஆட்சி அமைத்த நிதிஷ்குமாரை பாஜக அரசு வீட்டுக்கு அனுப்பிவிட்டது. அவரை ஒப்பிடும்போது எடப்பாடி பழனிசாமி நிலை என்ன என்பது மக்களுக்கே தெரியும். எனவே மற்ற மாநிலங்களில் மத்திய அரசு செய்யும் ஏமாற்றுவேலை தமிழகத்தில் செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.
