சென்னை,
நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களையும் வங்கி சேவை வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி பிரதமர் மோடி, பிரதமரின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி ஒருவர் தனது பெயரில் அடிப்படை வங்கி சேமிப்பு வைப்பு கணக்கை, அதாவது குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு வங்கி கணக்கை தொடங்கலாம். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. நாடு முழுவதும் ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தில் 57.71 கோடி பேர் வங்கிக்கணக்கை தொடங்கி உள்ளனர்.
அந்த வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 889 கோடி இருப்பு உள்ளது. இதன்மூலம் ‘ஜன் தன் யோஜனா’ வங்கி கணக்கின் சராசரி வைப்புத் தொகை ரூ.5 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.
இது 2022-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 694 ஆகவும், 2023-ம் ஆண்டு ரூ.4 ஆயிரத்து 87 ஆகவும், 2024-ம் ஆண்டு ரூ.4 ஆயிரத்து 476 ஆகவும், 2025-ம் ஆண்டு ரூ.4 ஆயிரத்து 719 ஆகவும் இருந்தது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 1 கோடியே 86 லட்சத்து 35 ஆயிரத்து 977 பேர் ‘ஜன் தன் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். அந்த கணக்கு களில் ரூ.7 ஆயிரத்து 308 கோடி இருப்பு உள்ளது.
