லீமா ரோஸ் சொத்து விவரம்
அந்த வகையில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் சொத்து விவரம் குறித்து தகவல்கள் வெளியாகி பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது. லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியான இவர் அதிமுக சார்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தின் வாயிலாக ரூ. 5,000 கோடிக்கு மேலான சொத்து மதிப்பு அவரிடம் இருப்பது தெரிய வந்துள்ளது.
பணக்கார வேட்பாளர்
இதன் மூலமாக தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார் லீமா ரோஸ். அவரது பெயரில் 1,048 கோடி சொத்துக்கள் உள்ளன. ரூ. 139.62 கோடி மதிப்பில் நகை உள்ளிட்ட அசையும் சொத்துக்கள், ரூ. 909.94 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளதாக லீமா ரோஸ் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாண்டியாகோ மார்ட்டின்
மேலும் அவருடைய கணவர் சாண்டியாகோ மார்ட்டின் பெயரில் 4,159 கோடி சொத்து மதிப்பும், மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ. 665 கோடி சொத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய இந்த சொத்து மதிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தனது மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் லட்சிய ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ்.
லால்குடி தொகுதி வேட்பாளர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி கட்சியில் இணைந்த அவருக்கு மகளிர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. கட்சியில் இணைந்த ஒரே மாதத்தில் லால்குடி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்தார் லீமா ரோஸ்.
திமுகவின் தொடர் வெற்றி
லால்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் தொடர்ந்து அங்கு திமுக வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2006, 2011, 2016, 2021 தேர்தல்களில் வெற்றி பெற்று திமுகவின் கோட்டையாக லால்குடி சட்டமன்ற தொகுதி உள்ளது. கடந்த முறை திமுக சார்பில் ஏ. சௌந்தர பாண்டியன் போட்டியிட்டு 84,914 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற டாக்டர் தர்மராஜ் 67,965 வாக்குகளுடன் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் லால்குடி வேட்பாளராக லீமா ரோஸ் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து திமுக வேட்பாளாராக பாரிவள்ளல் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் லால்குடி தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக லால்குடி தொகுதியை தக்க வைக்குமா அல்லது லீமா ரோஸ் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் ஜோஸ் டெய்சன் மார்டின்
இதனிடையில் லீமா ரோஸ் குடும்பத்தினர் தனித்தனியாக வெவ்வேறு கட்சிகளில் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுவது மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது. அதன்படி அவருடைய மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் லட்சிய ஜனநாயகக் கட்சி என்டிஏ கூட்டணியுடன் புதுச்சேரியில் தேர்தலை எதிர்கொள்கிறது. அதே போல் லீமா ரோஸ் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
