தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் – வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை,

வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி நம் மனக்கண்ணை விட்டு அகலும் முன்பே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்டதோடு, அவரது வயதான மனைவி பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கும் அறிவாலயத்தின் அவல ஆட்சியில் மனிதர்களின் மனம் எந்தளவிற்கு குரூரமாக மாறிவிட்டது என்பதை உணர்த்தும் இச்செய்தியை படிக்கும் பொழுதே உடல் கூசுகிறது. தனியாக வசித்து வரும் முதியோர்களைத் தாக்கி கொள்ளையடித்துக் கொண்டிருந்தது போதாதென்று, தற்போது வயது வரம்பின்றி அவர்கள் மீது பாலியல் வேட்டை நடத்துமளவிற்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் மிகுந்துள்ளது ஆளும் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி.

சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை, எவரும் எங்கும் பாதுகாப்பாக வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டு, “இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழகம்” என வாய்கூசாமல் மேடையில் வசனம் பேசிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனியும் முதல்-அமைச்சராக தொடர என்ன தகுதியிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link