சமையலில் அத்தியாவசியப் பொருட்களாக இருக்கும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை நிலவரம் தான் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மாத பட்ஜெட்டை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து உணவுகளிலும் இவற்றுக்கு முக்கிய இடம் இருப்பதால், காய்கறி சந்தைக்குச் செல்வோர் மற்ற பொருட்களை வாங்கினாலும் இந்த இரண்டையும் அதிக அளவில் வாங்குவது வழக்கம்.
இந்த நிலையில் தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை தரைமட்டத்திற்குச் சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சீசனில் கிலோ ரூ.13 வரை விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது வெறும் 3 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி செலவுக்கு கூட விலை கிடைக்காததால், கடும் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைக்கு கொண்டு செல்லாமல் விளைநிலங்களிலேயே ‘பட்டறை’ அமைத்துச் சேமித்து வருகின்றனர்.
பட்டறையில் சேமித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயங்கள் 3 மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும்.. அதற்குள் விலை உயராவிட்டால், வெங்காயங்கள் அழுகி ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் மூன்று மாத கால பயிர் என்பதால் விவசாயிகள் வெயில், மழை என்று பாராமல் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த சின்ன வெங்காயத்தை விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சின்ன வெங்காயத்திற்கு அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அழுகும் நிலையில் உள்ள வெங்காயத்தைப் பாதுகாக்க அரசு குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
