பூமியின் இயற்கை வளங்களை மனிதர்கள் அதிக வேகத்தில் பயன்படுத்தி வருவதால், தற்போதைய வாழ்க்கை முறை நீடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் ஆராய்ச்சி இதழில் வெளியான இந்த ஆய்வு, பூமியின் மீளுருவாக்க திறனை விட 70 முதல் 80 சதவீதம் அதிகமாக வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
இதனால், மனிதர்கள் தற்போது வாழும் வாழ்க்கை முறையை தொடர சுமார் 1.7 முதல் 1.8 பூமிகள் தேவைப்படும் என ஆய்வு கூறுகிறது. எளிமையாகச் சொன்னால், பூமி வழங்கக்கூடியதை விட அதிகமாக மனிதகுலம் பயன்படுத்தி வருகிறது.
இந்த ஆய்வை ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி கோரி பிராட்ஷா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளின் மக்கள்தொகை மற்றும் நுகர்வு தரவுகளை ஆய்வு செய்ததில், முந்தைய காலங்களில் மனித தேவைகள் மற்றும் இயற்கை வளங்களுக்கு இடையில் சமநிலை இருந்தது தெரியவந்துள்ளது.
ஆனால் 1950களுக்குப் பிறகு தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்த நுகர்வு காரணமாக இந்த சமநிலை முற்றிலும் மாறியது. இதுவே சுற்றுச்சூழலுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்திய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், உலக மக்கள்தொகை 2060–2070 காலகட்டத்தில் 11.7 முதல் 12.4 பில்லியன் வரை உச்சத்தை அடையலாம் என ஆய்வு கணிக்கிறது. இருப்பினும், இது நிலையான வளர்ச்சியாக இருக்காது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலைமை ‘சூழலியல் கடன்’ (Ecological Debt) என அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, காடழிப்பு மற்றும் இயற்கை வளங்களின் குறைவு போன்ற பிரச்சினைகள் தீவிரமடையும் அபாயம் உள்ளது. நிலையான உலக மக்கள்தொகை சுமார் 2.5 பில்லியன் அளவில் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் சமநிலை பேண முடியும் என ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம், மக்கள் தொகை அளவை விட நுகர்வு பழக்கவழக்கங்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், வளங்களை சிக்கனமாக பயன்படுத்துதல், கழிவுகளை குறைத்தல் மற்றும் நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். எதிர்காலத்தில் மனித குலத்தின் நலனும், பூமியின் நிலைத்தன்மையும் அடுத்த சில ஆண்டுகளில் எடுக்கப்படும் முடிவுகளிலேயே அமையும் என ஆய்வு தெளிவுபடுத்துகிறது.
