ஐதராபாத்,
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.
நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இதையடுத்து, நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக என்கவுன்டர் போன்ற அதிரடி நடவடிக்கையை பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால், ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். சரணடைபவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் மறுவாழ்வு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு முக்கிய தளபதி தேவ்ஜி. பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல், கொலை உள்பட பல்வேறு வழக்குகள் தேவ்ஜி மீது நிலுவையில் உள்ளன. மேலும், தேவ்ஜி தலைக்கு போலீசார் ரூ. 1 கோடி சன்மானம் அறிவித்திருந்தனர்.
தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கபட்ட மாவோயிஸ்டு தளபதி தேவ்ஜி ஆயுதங்களை கைவிட்டு இன்று போலீசில் சரணடைந்தார். அவருடன் மாவோயிஸ்டு மூத்த தலைவர் மலா ராஜு உள்பட மேலும் சில மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர்.
