மேற்கு ஆசியப் போரின் காரணமாக பல நாடுகளில் எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்புகளை உணர்வதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் எரிபொருளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்றும் இதுகுறித்த அறிவிப்புகளை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டது.
. இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பும், 74 நாட்களுக்கான கச்சா எண்ணெய் கையிருப்பும் உள்ளது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.க்கு எங்கும் எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. பற்றாக்குறை குறித்த தகவல்களை மக்களை பீதிக்குள்ளாக்கும் தவறான பிரசாரம் எனவும் கூறியுள்ளது. இந்தியாவில் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று சொல்லப்படுவதை மக்கள் நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சகம், அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படுவதாக கூறி அதனை எச்சரித்துள்ளது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
