சமீப காலமாகவே தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து இந்த வதந்திகளுக்கு தவெக தரப்பில் இருந்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா
இதனிடையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தவெகவுக்கு 90 இடங்களை வரை கொடுப்பதற்கு பேரம் நடத்தியதாக தெரிவித்தார். ஆளுக்கு இரண்டரை வருடங்கள் முதல்வராக இருக்கலாம் என்றெல்லாம் ஆஃபர் கொடுத்தார்கள். ஆனால் பதவிக்காக டெல்லிக்கு அடியபணிய மாட்டோம். 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று பேசியிருந்தார்.
விஜய்யை இணைப்பதற்கு முயற்சி
அவருடைய இந்த பேச்சின் மூலமாக அதிமுக, பாஜக கூட்டணியில் விஜய்யை இணைப்பதற்கு முயற்சிகள் நடந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
நயினார் நாகேந்திரன் விளக்கம்
என்னிடமும் அவர்கள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆதவ் எதற்காக அந்த மாதிரி சொன்னார் என்பதும் புரியவில்லை. மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக பேசினார்களா என்றும் தெரியவில்லை என ஆதவ் அர்ஜுனா பெயரை குறிப்பிடாமல் பேசியுள்ளார் நயினார் நாகேந்திரன்.
என்டிஏ கூட்டணியில் 5 இடங்களை கேட்கும் புதிய நீதிக்கட்சி.. அதிமுகவில் சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு
மேலும் திடீரென இபிஎஸ் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் எதுவும் உள்ளதா என்றும் கேட்கப்பட்டது. அதற்கு, நேற்று மாலை வரை அண்ணன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி கொண்டிருந்தேன். இன்னைக்கு அவர் டெல்லிக்கு போயிருப்பதாக சொன்னார்கள். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.
என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
அதோடு எத்தனை தொகுதிகள் பாஜக எதிர்பார்க்கிறது என்ற கேள்விக்கு, சீக்கிரமாகவே அதுபற்றி அறிவிப்போம். வெகு விரைவில் என்டிஏ கூட்டணி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் எனவும் தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன். தவெக தலைவர் விஜய்க்கு 90 சட்டமன்ற தொகுதிகளும், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி கொடுப்பதாகவும் டெல்லி பேரம் பேசியதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில், அது மாதிரி எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக தலைமையில் போட்டி
இதனிடையில் நேற்றைய தினம் தவெக சார்பில் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 1000 பேர் பங்கேற்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் பேசுகையில், நம்முடைய மதச்சார்பற்ற கொள்கையில் எந்த சமரசமும் கிடையாது. அரசியல் வருகைக்கு பின்பாக வதந்திகள் பரப்பப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை என்பதெல்லாம் பொய். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். அவரின் இந்த பேச்சின் வாயிலாக பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
