வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், வாக்குகள் பெரிதும் பிரியும் என்கின்றனர். இந்நிலையில் 2026 தேர்தல் களம் தொடர்பாக தமமுக ஜான் பாண்டியன் பேசியவற்றை விரிவாக பார்க்கலாம்.
என்.டி.ஏ வலுவான கூட்டணி
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜான் பாண்டியன், அதிமுக – பாஜக கட்சியின் மூத்த தலைவர்கள் இணைந்து பேசி வருகின்றனர். அவர்கள் இறுதி முடிவை அறிவிப்பர். அதன்படி நாங்கள் செயல்படுவோம். திமுகவை போல கதவை திறந்து வைத்துக் கொண்டு வரக் கூடிய கட்சிகள் அனைத்திற்கும் சீட் கொடுக்கும் கூட்டணி நாங்கள் அல்ல. நாங்கள் அமைதியாக இருக்கிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். அடுத்தடுத்து வெளியேறிய தலைவர்களால் அதிமுகவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறதா? என்று கேட்டதற்கு, அவர்கள் இருக்கும் போது வெற்றிக்கு என்ன செய்தார்கள்.
பாமகவில் என்ன பிரச்சனை? ஜான் பாண்டியன் சொன்ன தகவல்..!
அதிமுக பலவீனமடையவில்லை – ஜான் பாண்டியன்
தற்போது போனதால் எந்தவித பாதிப்பும் கிடையாது. முக்குலத்தோர் சமூகத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் என்ன நல்லது செய்தார்? கவுண்டருக்காக செங்கோட்டையன் என்ன செய்தார்? எங்கள் கூட்டணியை விட்டு சென்றவர்களுக்கும் இதே பதில் தான். தேமுதிகவை பொறுத்தவரை பிரேமலதாவின் தம்பி சுதீஷிற்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற நோக்கில் திமுகவிற்கு சென்றிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார். பாமக பிளவுபட்டிருப்பதால் என்.டி.ஏ கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. அன்புமணி பின்னால் தான் ஒட்டுமொத்த கட்சிக்கும் இருக்கிறது.
விஜய் வருகையால் யாருக்கு நஷ்டம்?
சசிகலா நேற்று அரசியல் கட்சியை தொடங்கினால் தேர்தல் களத்தில் எப்படி எடுபடும்? அதெல்லாம் மக்கள் ஏற்க மாட்டார்கள். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வருகையால் சிறுபான்மை வாக்குகளை அதிகம் வாங்குவர். விஜய் கிறிஸ்துவர் என்பதால் திமுகவிற்கு இத்தனை ஆண்டுகளாக சென்று கொண்டிருந்த வாக்குகள், அப்படியே மடைமாற்றமாகி தவெக பக்கம் செல்லும். இதேபோல் விசிக மீது அதிருப்தியில் இருப்பவர்களின் வாக்குகளும் அப்படியே தவெகவிற்கு சென்றுவிடும். எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் திமுக கூட்டணிக்கு தான் விஜய்யின் வருகை பின்னடைவாக மாறும். எங்களுக்கு பாதிப்பில்லை.
திமுக எதிர்ப்பு வாக்குகள்
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் அல்லது நோட்டாவிற்கு போட்டு கொண்டிருந்தனர். தற்போது அப்படியே தவெக பக்கம் செல்லப் போகிறது. அதனால் தான் அதிமுக கூட்டணிக்கு பாதகம் ஏதுமில்லை என்றார். விஜய்யை பொறுத்தவரை வெற்றி பெற முடியாது. ஆனால் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறுவார் என்பதை 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தான் தெரிய வரும்.
அதற்கு முன்னதாக 20 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்குவார் என்று சொல்வதை ஏற்க முடியாது. எத்தனையோ கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்த்து போயிருக்கின்றன. ஆட்சியில் பங்கு என்பது எல்லா கட்சிகளுக்கும் ஆசை தான். ஆனால் இதுவரையிலான வரலாற்றை திரும்பி பார்த்தால் மத்தியில் ஆட்சியில் பங்கை திராவிட கட்சிகள் வைத்து கொள்வார்கள். ஆனால் மாநிலத்தில் அப்படியான நிலைப்பாட்டை எடுப்பதில்லை. 2026 தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக – பாஜக தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
