தான்தோன்றித் தனமாக வெடித்துச் சிதறாமல்.. கமலின் முடிவு குறித்து திருமாவளவன் பகிர்ந்த பதிவு – vck mp thirumavalavan welcomes mnm founder kamal haasan decision

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதோடு திமுக கூட்டணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கமலின் இந்த முடிவு பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி.

கமல் – திருமாவளவன்
சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு சம்பந்தமாக கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மநீம கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டி எனவும் திமுக பேசியதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் முதலமைச்சரை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார்.

முதல்வர் நெகிழ்ச்சி

அதோடு திமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதாகவும் அதிரடியாக தெரிவித்தார். அவருடைய இந்த முடிவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரும் வரவேற்பினை கொடுத்தார். அதோடு திமுகவினர் பலரும் கமலுக்கு பாராட்டு தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, கமலின் முடிவு குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
திருமாவளவன் எம்பி பதிவு
அதில், “எங்களுடைய பங்கு எங்கே என்று நெருக்கடியான சூழ்நிலையில் கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்க முடியாது. அது தியாகம் கிடையாது. கடமை. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அண்ணன் கமல் ஹாசன் அவர்களுடைய இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் புரிதலின் வெளிப்பாடு. தனது கையறுநிலையை நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாத விதமாக நனிநாகரித்துடன் தெளிவுப்படுத்தியுள்ளது.
அரசியல் வரலாற்றில் நிலைத்து நிற்கும்
இது அவருடைய அறிவு முதிர்ச்சியையும், அதி உச்சமான பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு துணிச்சலாக அவர் எடுத்துள்ள இந்த முடிவு என்றென்றும் அரசியல் வரலாற்றில் நிலைபெறக்கூடிய ஒன்றாகும். அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு தான்தோன்றித் தனமாக உணர்ச்சிவசப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறவில்லை.
அண்ணன் கமலின் நிலைப்பாடு
திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாக பணியாற்றுவோம். நாங்கள் போட்டியிட விரும்பவில்லை என்று அண்ணன் கமல் ஹாசன் எடுத்துள்ள இந்த நிலைப்பாடும் காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம். மக்கள் மத்தியில் அவர்மீது நிலவும் அதி உயர்வாக நம்திப்பு பல மடங்கு பல்கிப் பெருகும். இவ்வாறு தன்னுடைய பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் திருமாவளவன்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டி
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு, திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இரண்டு இடங்களும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் மநீம டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்
இந்நிலையில் நேற்றைய தினம் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல் ஹாசன். இதனிடையில் திமுக கூட்டணியில் விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், எட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.