திமுகவின் ஸ்லீப்பர் செல்… கரூர் சம்பவத்தின் சகுனி.. ஆதவ் அர்ஜுனா மீது ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அடுக்கிய குற்றச்சாட்டு

புதுச்சேரி,

லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தவெக தலைவர் விஜய் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆதவ் அர்ஜுனா தவெகவிற்குள் நுழைந்தது சேவையாற்ற அல்ல; அவர் திமுகவின் ஒரு ‘ஸ்லீப்பர் செல்’. விஜய்யையும் அவரது கட்சியையும் வேரோடு அழிப்பதற்காகவே ஒரு திட்டத்துடன் அவர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளார். தவெக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதைத் தடுத்து, அக்கட்சியைத் தனிமைப்படுத்துவதே ஆதவ் அர்ஜுனாவின் முக்கிய வேலை.

விஜய்க்கு தவறான தகவல்களை வழங்கி, மக்கள் ஆதரவை எதிரணிக்குச் சாதகமாக மாற்றும் சதிவேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். கட்சியில் உள்ள மற்ற முக்கிய நிர்வாகிகளை ஓரம் கட்டிவிட்டு, தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறார். கரூர் துயர சம்பவத்தில் 41 அப்பாவி உயிர்கள் பறிபோன கோர சம்பவத்திற்கு பின்னணியில் சகுனியாக இருந்து காய் நகர்த்தியவர் ஆதவ் அர்ஜுனாதான்.

சிபிஐ விசாரணையில் இவரது முகத்திரை கிழியும் என்பது உறுதி. அன்று செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து சென்றதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு. செல்லும் இடமெல்லாம் தன்னைத் தானே தலைவனாக கட்டமைக்க முயல்வது இவரது வழக்கம். இதையுணர்ந்தே திருமாவளவன் அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தினார். என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன் எங்கள் குடும்பத்தை பிரித்தது போல் விஜய் குடும்பத்தையும் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆதவ் அர்ஜுனா செய்ய தயங்கவே மாட்டார்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என துடிக்கும் உங்கள் பயணத்திற்கு, நான் ஒரு நலம் விரும்பியாகச் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்… உங்கள் பாதை தெளிவாக இருக்கலாம். ஆனால் பயணிக்க வேண்டிய தடம் வழுக்கலாக இருக்கிறது. கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காண தவறினால், உங்கள் வெற்றி பாதியிலேயே முடங்கிப்போகும் அபாயம் உண்டு. காலத்தே எடுக்கும் துணிச்சலான முடிவே கழகத்தின் எதிர்காலத்தை காக்கும். விழிப்புடன் இருங்கள், வெற்றிக்கான பாதையை சீர் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source link