திமுகவில் இணைந்தார் அஜிதா ஆக்னல்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக நிர்வாகியாக இயங்கிவந்த அஜிதா ஆக்னல், நேற்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி முன்பு திமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய போதே தீவிரமாக கள பணி ஆற்றி வந்தார். தவெக என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய போது மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று அஜிதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். 

இதனால் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னரும் விஜய் கண்டு கொள்ளாததால் அதிருப்தியடைந்த அஜிதா, 15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அஜிதா, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

ஆனால் தவெக தரப்பில் அஜிதாவிடம் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தவெக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இருக்கும் என நம்பி இருந்தார். ஆனால், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டார். இதனால் மீண்டும் அஜிதாவும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அஜிதாவின் ஆதரவாளர் ஒருவர், தனது வாகனத்தில் இருந்த தவெக கொடியை அகற்றி தனது எதிர்ப்பை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், சரியாக 22 தினங்கள் கழித்து இன்று திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார் அஜிதா ஆக்னல்.

Source link