சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சம்பந்தமாக தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. அதோடு வேட்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக நேர்காணலும் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக தேதி குறித்தான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாட்டிலும், ஏப்ரல் 9 அன்று புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பல கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
விருப்பமனுக்கள் வினியோகம்
இதனிடையில் கடந்த பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 வரை தேதி வரை திமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. கிட்டத்தட்ட 15,372 பேர் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
முதல்வர் நேர்காணல்
புதுச்சேரியில் முதலில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்கட்டமாக புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்யப்பட்டது. இந்நிலையில் திமுக சார்பில் விருப்ப மனு அளிக்கப்பட்டது தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
7 முக்கிய தொகுதிகள்
அதாவது, 7 தொகுதிகளில் திமுக சார்பில் யாருமே விருப்ப மனு அளிக்கவில்லை. அதன்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஐ. பெரியசாமியின் ஆத்தூர், கே.என். நேருவின் திருச்சி மேற்கு, தங்கம் தென்னரசுவின் திருச்சுழி, சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம் மற்றும் மூர்த்தியின் மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளில் திமுக சார்பில் யாரும் போட்டியிட மனு அளிக்கவில்லை.
அவர்களுடைய பெயரிலே விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகுதிகளில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அவர்களே போட்டியிட வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இவர்களுக்கு அங்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அவர்களுடைய பெயரிலே அதிகமான விருப்பமனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ்ஸிடம் நேர்காணல்
இதனிடையில் நேற்று முன்தினம் ஓபிஎஸ் அவர்களை நேர்காணல் செய்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள நிலையில், அவரிடம் முதல்வர் நேர்காணல் செய்தார். மற்றொரு பக்கம் தென் தமிழகத்தில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ் . அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர், தற்போது திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
