திமுக அரசை கண்டித்து சிவகங்கையில் 16-ந் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகவும், இங்குள்ள அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவும், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத இந்த அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அதிமுக சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் 16-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும்; சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னிலையிலும் நடைபெறும். இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள்; மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், நகர, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், மானாமதுரை நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link