திமுக இறக்கும் மூவர் அணி… தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ்- எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு! – thamimun ansari thaniyarasu karunas seat allocation in dmk alliance 2026 assembly election

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக மூவர் அணியை இறக்கவுள்ளது பெரிதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதில் அதிமுகவின் வாக்கு வங்கியை பலவீனமடைய செய்வது, தவெக எதிர்ப்பு போன்ற கணக்குகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Thamimun Ansari Thaniyarasu Karunas(புகைப்படங்கள்Samayam Tamil)
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு வேகமாக நடந்து வருகிறது. அடுத்த 3 நாட்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டு முழு வடிவம் பெற்று விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ஆர்வம் காட்டி திமுகவினர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விருப்ப மனு அடிப்படையில் நேர்காணலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இந்த சூழலில் தான் மூவர் அணியை களமிறக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. வேறு யாருமல்ல.

திமுக கூட்டணிக்கு வந்த மூவர் அணி

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா மூலம் சீட் வழங்கப்பட்டு எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை). அதிமுக ஆட்சியில் இந்த மூவரின் செயல்பாடுகள் கவனம் ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததை மறுக்க இயலாது. பல்வேறு மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் எழுப்பியது, ஆட்சி மீதான விமர்சனங்களை முன்வைத்தது உள்ளிட்டவற்றை சொல்லலாம். 2021 சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல் தனித்து செயல்பட்டனர்.

தலைமை பொறுப்பு யாருக்கு? சசிகலா யார் பக்கம்? – தனியரசு பேட்டி!

2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் இந்த மூவருக்கும் சீட் ஒதுக்க திமுக தலைமை முன்வந்திருக்கிறது. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது ஏற்கனவே திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 3 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளின் இடங்களை குறைத்து கொள்ளுமாறு திமுக தலைமை அழுத்தம் கொடுத்து வருகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீட்டில் இழுபறி

இதனால் சிபிஎம், விசிக உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி வருவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். புதிய கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டும். இப்படியான சூழலில் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகிய மூவரையும் கூட்டணிக்குள் சேர்த்து, சீட் ஒதுக்க முன்வந்திருப்பதன் பின்னணியில் நிச்சயம் அரசியல் கணக்குகள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

தனியரசு – கொங்கு மண்டல செல்வக்கு

கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கிற்கு போட்டியாக தனியரசுவை பயன்படுத்தி கொள்ள திமுக விரும்புகிறது. இவரது பாஜக எதிர்ப்பு நிலைப்பாடு, தவெகவிற்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் ஆகியவற்றை சாதகமாக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் பரவலான செல்வாக்கு இருக்கிறது.
தனியரசு ஒரு தொகுதியில் போட்டியிட்டாலும், அவரது அமைப்பை சேர்ந்தவர்கள் மற்ற தொகுதிகளில் வேலை செய்வர். இது திமுக கூட்டணியின் வெற்றிக்கு உதவும். முன்னதாக பரமத்திவேலூர் (2011), காங்கேயம் (2016) ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர். 2026 தேர்தலில் நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிமுன் அன்சாரி- சிறுபான்மையின வாக்குகள்

தமிமுன் அன்சாரி 2016ல் நாகை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு, தனித்துவமான தீர்மானங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவது போன்றவற்றின் மூலம் கவனம் ஈர்த்தவர். இவருக்கு நாகை, விருகம்பாக்கம், ஆர்.கே.நகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பாபநாசம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க திமுக ஆலோசித்து வருகிறது. தமிமுன் அன்சாரி மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை அறுவடை செய்ய காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் பெரும்பாலானவை தற்போது திமுக பின்னால் நிற்பதை பார்க்க முடிகிறது.

கருணாஸ் – தென் தமிழக முக்குலத்தோர் ஆதரவு

2016ல் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தவர் கருணாஸ். ஒருகட்டத்தில் சசிகலா ஆதரவாளராகவும் பார்க்கப்பட்டார். இவருக்கு 2026 தேர்தலில் சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தென் தமிழகத்தில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்வதில் கருணாஸ் ஓர் அங்கமாக இருப்பார் என திமுக கருதுகிறது. இம்முறை அதிமுக உடன் அமமுக கைகோர்த்துள்ளதால் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக கைமாறிவிடக் கூடாது என்று திட்டமிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தை திமுகவிற்குள் கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் கச்சிதமாக காய் நகர்த்தியது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய்யின் தவெகவை நேரடியாக எதிர்க்காமல் தங்களின் கூட்டணி கட்சிகள் மூலம் எதிர்க்க திமுக தலைமை வியூகம் வகுத்திருப்பதை பார்க்க முடிகிறது.