புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இதன் பின்னணி என்ன, அடுத்தடுத்த களம் எப்படி நகரப் போகிறது என விரிவாக பார்க்கலாம்.
திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு
ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு சீட் வேண்டும் என்ற கணக்கில் 40ல் இருந்து தான் பேச்சுவார்த்தையை தொடங்கினர். 10 நாட்களுக்கும் மேல் இழுபறி நீடித்தது. ஒருவழியாக 28 தொகுதிகளில் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியது, கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதலாக 3 சீட் பெற்றது போன்ற விஷயங்கள் திமுக தலைமையை மட்டுமின்றி, தொண்டர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விஷயங்கள் எல்லாம் தேர்தல் களத்தில் எப்படி சரியாகப் போகிறது? என்று நினைக்கையில், புதுச்சேரியில் பெரிய பிரச்சினை வெடித்திருக்கிறது.
தமிழகத்தில் கூட வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக இறுதி வடிவம் கிடைத்தது. அடுத்து எந்தெந்த தொகுதிகள் என்ற ஆலோசனைக்கு நகர்ந்துள்ளனர். ஆனால் புதுச்சேரியில் அந்த அளவிற்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. மார்ச் 16ல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இடையில் அரசு விடுமுறை நாட்களும் வந்ததால் குறைந்த நாட்களே இருந்தன. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. கடைசி நேரம் வரை இருகட்சிகளும் சீட் ஒதுக்கீட்டில் இறங்கி வரவில்லை. புதுச்சேரியிலும் கிரிஷ் சோடங்கர் கொடுத்த அழுத்தம் நெருக்கடியாக மாறியது.
இன்றே கடைசி நாள் – குழப்பத்தில் வேட்பாளர்கள்
கிட்டதட்ட 50, 50 டீலாக தொகுதிகளை பிரித்து கொள்ள திமுக முன்வந்தது. ஆனால் பாரம்பரியமாக எங்களுக்கு வாக்குகள் இருக்கின்றன. அதை கருத்தில் கொண்டு கூடுதலாக இடங்கள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில் கூட ஏமாற்றத்தில் உடன் இருகட்சி தலைவர்களும் வெளியேறினர். ஒருவழியாக வேட்புமனு தாக்கலை சமாளித்து வரும் இரு கட்சிகளும், அடுத்த 3 நாட்களில் என்ன செய்யப் போகின்றன என்பது முக்கியமானது. இவ்வளவு தூரம் இழுபறியாவது எப்படி வாக்குகளை பரிமாற்றம் செய்யும்? கூட்டணிக்கான அர்த்தத்தையே கெடுத்துவிடும் போலிருக்கிறது.
2004 முதல் திமுக – காங்கிரஸ் இடையில் சுமூக கூட்டணி தொடர்ந்து வந்தது. 2014ல் உடைந்தது. அதன்பிறகு மீண்டும் கைகோர்த்த நிலையில், இதுவரை காணாத அளவிற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ”யார் பெரியண்ணன்?” என்ற அரசியல் கணக்கு இந்த அளவிற்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி உடன் சிறிய எண்ணிக்கையில் இதுவரை போட்டியிட்டு வந்த திமுக, கடந்த 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் புதிய கணக்குகளை போட வைத்தது. காங்கிரஸ் 14ல் நின்று 2ல் வென்றது. திமுக 13ல் நின்று 6ல் வெற்றி பெற்றது.
இனி கூட்டணி கணக்குகள் மாறும்
எனவே 2026 தேர்தலில் திமுகவிற்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்க வேண்டும் என்று கணக்கு போட்டுள்ளனர். ஆனால் அதை காங்கிரஸ் ஏற்கவில்லை என்பது தான் சிக்கல். இதேநிலை தொடர்ந்தால் 2026 தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக வரக்கூடும். அதுமட்டுமின்றி அடுத்து வரும் தேர்தல்களில் கூட்டணி கணக்குகளை பெரிதாக மாற்றி எழுதவும் அச்சாரம் போட்டு விடும். தவெகவின் வருகையால் தமிழகம், புதுச்சேரி, கேரளா என மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் இருக்கிறது. சரியான நேரம் பார்த்து கொண்டிருக்கின்றனர். அதற்கான தூரம் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது.
