திமுக தொழிற்சங்க அலுவலகத்தில் அடிதடி, ரகளை  இருதரப்பினரிடையே கைகலப்பு

திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையில், மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கான நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துள்ளது. புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து சில நிர்வாகிகள் முட்டுக்கட்டையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  

இதனால் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுப்பதற்கு நிர்வாகிகள் இல்லாததால், தற்காலிக புதிய நிர்வாகிகளாக கொளத்தூர், பெரம்பூரை சேர்ந்தவர்கள் அன்பகம் கலை என்பவர் மூலம் அண்மையில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென, 2022 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பழைய நிர்வாகிகளே, அடுத்த தேர்தல் நடைபெறும் வரை செயலாற்றுவார்கள் என திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை அடுத்து நேற்று  பல்லவன் சாலையில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு பழைய நிர்வாகிகள் சென்ற போது, அங்கு ஏற்கனவே பணியில் இருந்த புதிய நிர்வாகிகள் அவர்களை கடுமையாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

இரு தரப்பினருக்கும் இடையே ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ தொழிலாளர் சங்கத்துக்கு பதவிக்கால முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் தேர்தலை நடத்த முடியாமல் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை திணறி வருவதாக நிர்வாகிகள் மத்தியில் சலசலக்கப்படுகிறது.

Source link