திருச்சி,
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
அதன்படி, சமயபுரம் வந்து தங்கி இருந்து காலையில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக வருகை தந்த பக்தர்கள் சிலர் கோவில் சன்னதி வீதி மண்டபத்தில் படுத்து உறங்கி உள்ளனர் , அப்போது மண்டப சீலிங் மேற்கூரை காங்கிரட் சுவர் மூன்று பெண் பக்தர்கள் மீது விழுந்தது. இதில் தஞ்சாவூர் திருப்பந்துருத்தியை சேர்ந்த நதியா (வயது 32) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, அருகில் இருந்த மற்ற பக்தர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த சமபவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
