திருச்சி மண்டல ரெயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழ் பெயர் – மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திருச்சி,

திருச்சி மண்டல ரெயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்த்தவ்ய துவார்” என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரெயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர், சமீபத்தில் மலேசிய பல்கலைக்கழகத்தில் “திருவள்ளுவர் இருக்கை” அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.

இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link