திருநெல்வேலியில் ஆயுதத்தால் தாக்கி காயம்: வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு, இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, ஆரைக்குளத்தை சேர்ந்த ராஜ தினகரன் (வயது 33) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த வெஸ்லின்கிராஸ்(25), பிரவீன்(எ) பிரவீன்டேனியல்(25), கண்ணன்(28) ஆகிய 3 பேரும் சேர்ந்து அசிங்கமாக பேசி அபாயகரமான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது. திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றம் எண்-V-ல் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றவாளிகள் 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவியல் நீதித்துறை நடுவர் ராணி நேற்று வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியான வெஸ்லின்கிராஸ் என்பவருக்கு IPC 324, 352 பிரிவுகளின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்தார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 2 குற்றவாளிகளான பிரவின்(எ) பிரவீன்டேனியல் மற்றும் கண்ணன் ஆகிய 2 பேருக்கும் IPC 352 பிரிவின்படி, தலா ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், முன்னீரபள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் (தற்போது ஓய்வு), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த ஏட்டு மாணிக்கராஜ் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் மதிவாணன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Source link