திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் நரேந்திர ஏசரி பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நரேந்திர ஏசரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் செலவினக் கண்காணிப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, திருநெல்வேலி கோட்டாட்சியர் பிரியா மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கூட்டங்களைத் தொடர்ந்து, தேர்தல் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய திருநெல்வேலி-சேரன்மகாதேவி சாலையில் சுத்தமல்லி பகுதியில் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனையைப் பார்வையிட்டார். புதுப்பேட்டை சோதனைச் சாவடியில் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் ஆவணப் பதிவுகள் குறித்து ஆய்வு செய்தார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை சரியாக கண்காணிக்கவும் குழுவினருக்கு உரிய அறிவுரைகளை அவர் வழங்கினார்.

Source link