திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் சந்தியா (25 வயது). இவருக்கும், சென்னை முகப்பேர் பாடசாலை தெருவைச் சேர்ந்த கார்த்திக் (28 வயது) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் சந்தியா, கணவருடன் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக பட்டாபிராம் சத்திரம் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவரது தந்தை பிரபு, சந்தியாவை சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து நேற்று மாலை சந்தியா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக தெரிகிறது. பட்டாபிராம் ரெயில் நிலையம் அருகே அவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த சந்தியா உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தியா, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
