விருதுநகர்,
விருதுநகரை சேர்ந்த பெண் ஒருவர் பியூட்டி பார்லர் மற்றும் துணி தைக்கும் கடை நடத்தி வந்தார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த பெண்ணுடன் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் போலீஸ்காரராக பணியாற்றிய சுந்தர்ராஜ் (35 வயது) என்பவர் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, அந்த பெண்ணுடன் சுந்தர்ராஜ் உல்லாசமாக இருந்து, அதை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து பலமுறை மிரட்டி ரூ.80 லட்சம் வரை பறித்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண்ணின் மகளை மருத்துவருக்கு படிக்க வைப்பதாக கூறி பலமுறை சுந்தர்ராஜ் பணம் வாங்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண், பணத்தை திரும்ப தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதற்கிடையே அந்த போலீஸ்காரர், உன்னுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோவை உன் உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக கூறியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சுந்தர்ராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் சுந்தர்ராஜ் கடந்த நவம்பர் மாதம் முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
