தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், விசிக சார்பில் ஏற்கனவே சட்டமன்றா உறுப்பினர்களாக உள்ள 4 பேரில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூவருக்கும் மீண்டும் சீட் கொடுக்கப்படவில்லை. சிந்தனை செல்வனுக்கு மட்டுமே மீண்டும் சீட் வழங்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 4ந் தேதி காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தானே போட்டியிடுவதாக கூறிவிட்டு, பின்வாங்கிவிட்டார்.
பொதுவாக அரசியல் கொள்கை என்னவாக இருந்தாலும், திருமா இதுபோன்ற முடிவுகளை எடுக்க கூடியவர் இல்லை. எப்போதும் யோசித்து திட்டமிடும் அவர், போட்டியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, மீண்டும் பின்வாங்கியது விமர்சனத்திற்குள்ளானது. இது ஒருபுறம் இருக்க, நேற்று (ஏப்.11) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் அ.சிவாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சியாக உள்ளது. விஜய் கூப்பிடுகிறார், எடப்பாடி கூப்பிடுகிறார், அங்கே சென்றால் கிட்டத்தட்ட 30 தொகுதிகள் தருவார்கள் என்று பலரும் சொன்னார்கள். ஆனால், நான் ஆதாயத்துக்காக போகவில்லை.கொள்கைக்காக திமுகவுடன் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் அது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் ஓட்டுப் போட்டதற்கு சமம்.
இரட்டை இலை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த இரட்டை இலை இல்லை. மோடி, அமித்ஷாவிடம் அடமானம் வைக்கப்பட்ட இரட்டை இலை. தப்பித் தவறி இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால், தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்க மாட்டார். அவருக்கு பதிலாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா அல்லது அண்ணாமலை தான் முதல்வராக அறிவிக்கப்படுவார்கள். கூட்டணி என்றாலும் புதுச்சேரி, பீகார் போன்று மாநில கட்சியை ஓரங்கட்டிவிட்டு பாஜக சவாரி செய்யும் என்பதை சுட்டிக்காட்டி இருந்தார்.
அதைத்தொடர்ந்து, நேற்று கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளர் அப்துல் ரகுமானை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை செய்ததாக விசிக தலைவர் திருமாவளவன், விசிக பண்ருட்டி வேட்பாளர் அப்துல் ரகுமான் மீது நெல்லிக்குப்பம் போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருமா எடுத்த அதிரடி முடிவு…இது தான் காரணமா?
இதற்கு முன், வெள்ளிக்கிழமை நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூடி சாலையை மறித்து பட்டாசு வெடித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறியதாக விசிக நிர்வாகிகள் புருஷோத்தமன், முல்லை வேந்தன், அருட்செல்வம், இளம்பிறை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
