திரைப்பட விருது தேர்வில், தமிழக அரசின் நிலைப்பாடு பாரபட்சமாக இருக்க கூடாது – இயக்குநர் சேரன்

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், மேலும் 2015–2016 கல்வியாண்டு முதல் 2021–2022 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள், வரும் 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.

இந்த விருது அறிவிப்பு சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பெரும்பாலான தமிழ் படைப்பாளிகளுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பல திரைப்படங்களுக்கு ஒரு விருதுகூட கிடைக்கவில்லை. மாறாக, சில மோசமான திரைப்படங்கள் தேர்வாகியிருந்தன.

இந்த நிலையில், மாநில விருதுகள் குறித்த தனது கருத்தை இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பெண்களுக்கு இலவச பஸ்.. வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை.. திருமணத்திற்கு அரசு உதவி.. இதையெல்லாம் செய்யும் அரசு .. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த “திருமணம்” திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது.. அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது இனி எவருக்கும் இதுபோல் நடக்க கூடாது.. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. அரசுகள் மாறலாம்.. அரசின் நிலைப்பாடு என்றும் பாரபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.

Source link