சென்னை,
சென்னை கொடுங்கையூர் எவரெடி காலனியை சேர்ந்த புஜங்கர் ராம் என்பவர், தனது வீட்டில் பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகள் மாயமானதாக கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, வீட்டின் கதவு, பீரோ எதுவும் உடைக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் வீட்டில் இருந்தே நபர்களே கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், புஜங்கர் ராமின் குடும்பத்தினரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதில் புஜங்கர் ராமின் மகளான ஐஸ்வர்யாவிடம், அவரது தோழி ஜெயஸ்ரீ மூலம் அறிமுகமான ஸ்ரீ தீப தர்ஷன் என்பவர், ‘உங்கள் வீட்டில் தீய சக்தி இருக்கிறது. அதை விரட்ட பூஜைகள் செய்வதற்கு நகைகளை கொடுக்க வேண்டும்’ என்று கூறி கொஞ்சம் கொஞ்சமாக 70 சவரன் நகைகளை மோசடி செய்து சுருட்டியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அரும்பாக்கம் வீணா கார்டன் பகுதியில் வசித்த தீப தர்ஷனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 63 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய ஜெயஸ்ரீ என்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
