தெலுங்கு தேச வேட்பாளர் மீது தாக்குதல்.. Y.S.R. காங். கட்சியினர் அடாவடி.. திருப்பதி ஸ்ட்ராங் ரூமில் பரபரப்பு

திருப்பதியில், சந்திரகிரி சட்டமன்ற தொகுதி தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் மீது ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சியினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஆந்திராவில், கடந்த 13-ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், திருப்பதி பத்மாவதி மகிளா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமை ஆய்வு செய்வதற்காக, சந்திரகிரி சட்டமன்ற தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி காரில் சென்றார். பல்கலைக்கழகம் அருகே அவர் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கு கூடியிருந்த சந்திரகிரி தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மோகித்  ரெட்டி ஆதரவாளர்கள், அவரது கார் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். கற்கள், பீர் பாட்டில், சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதால், அந்த இடமே கலவர பூமியாக மாறியது. 

அப்போது, புலிவர்த்தி நானியின் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறை அதிகாரி மீதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கட்டையால் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் அவர் காயமடைந்த நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி இருமுறை சுட்டார். இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. 

தாக்குதல் காரணமாக பத்மாவதி மகிளா பல்கலைக்கழகத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், அங்கு இருந்தவர்களை அடித்து விரட்டினர். இதனிடையே, புலிவர்த்தி நானியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் பல்கலைக்கழகத்தில் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு அதிகரித்தது. 

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரின் அடாவடியால் காயமடைந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் புலிவர்த்தினி நானி, தற்போது திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் அவரது கார், காவல்துறை வாகனம் உட்பட பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

 

கலவரம் குறித்து பேட்டியளித்த திருப்பதி எஸ்.பி கிருஷ்ணகாந்த் படேல், புலிவர்த்தி நானியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும், பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இன்னும் எத்தனை மோதல்கள் ஏற்படுமோ? என மக்கள் பீதியில் உள்ளனர்.

Source link