இதன் காரணமாகவே, விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கியதும் கட்சியில் இணைந்துக் கொண்டார். 2006 சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தொகுதியிலும், 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிகயிலும் தேமுதிக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இருப்பினும், விசுவாசம் காரணமாக விஜயகாந்த் மறைவிற்கு பின்னரும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார் மீசை ராஜேந்திரன். இந்நிலையில், வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக முதல் முறையாக தேமுதிக, திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவிற்கு மொத்தம் 10 தொகுதிகளும், 1 ராஜ்யசபா சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தேமுதிக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து இவர் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கு மக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், தேமுதிக கட்சிக்காக பணியாற்றி வந்த மீசை ராஜேந்திரன் திடீரென அக்கட்சியில் இருந்து விலகுவதாக பிரேமலதா விஜயகாந்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில், 31 ஆண்டுகளாக விஜயகாந்த் நற்பணி மன்றத்திலும், 20 ஆண்டுகளாக தேமுதிக கட்சிக்காகவும் உழைத்து இருக்கிறேன். 3 முறை தேமுதிக சார்பில் போட்டியிட்ட எனக்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை. விஜயகாந்த் உடன் விசுவாசமாக இருந்தேன். ஆனால், என்னுடைய விசுவாசத்துக்கு மதிப்பும், மரியாதையும் இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
அதனால், இப்போது தேமுதிக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நான் விலகுகிறேன். கேப்டன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் எந்தவித மனவருத்தமும் இல்லை. இருப்பினும், கட்சியில் இருக்கும் சூழ்நிலைகள் சரியில்லை. இதனால் நான் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபா சீட்க்கு No சொன்ன அதிமுக? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…!
தற்போது, வேறு கட்சியில் இணைவது குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை எனவும், மற்ற கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தால் அதன் பிறகு அங்கு சேர்வது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இவரின் முடிவு தேமுதிக மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அங்கிருந்து விலகிய அதே நாளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், மீசை ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதோடு, தேமுதிக, திமுக கூட்டணி கட்சியின் எதிர்கட்சியாக விளங்கும் அதிமுகவில் இணைந்து இருப்பது தேமுதிகவில் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், இக்கட்சியில் மீசை ராஜேந்திரனுக்கு எந்த மாதிரியான பதவி வழங்கப்படும் என்பது குறித்து கூடிய விரைவில் அக்கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
