சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இந்த பெயருக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. ரஜினிகாந்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மொழி பேதமின்றி, எந்த நாட்டிலும் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு.
தனது 75 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படம் உலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார்.. இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்..
இந்த நிலையில் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்காக சென்ற ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும்.. ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிவித்தார். ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று ரஜினி தெரிவித்தார்..
தேர்தலில் பரப்புரை செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு No Comments என்று ரஜினி பதில் சொன்னார்.. தேர்தல் நெருங்கும் சூழலில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு இரு கையை கூப்பி வணக்கம் சொன்னார்.
கடந்த மாதம் சென்னையில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசிய பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஆதவ் அர்ஜுனா “ அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் திமுக குடும்பம் மிரட்டியதால், அந்த மிரட்டலுக்கு பயந்து தான் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டார்.. விஜய்யிடம் மனவலிமை இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்..” என்று பேசியிருந்தார்.
அவரின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையாற்றினர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆதவ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்..
பின்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினி தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி சொன்ன ரஜினி, காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
